இளந்திரையனால் முடக்கிவிடப்பட்ட குதிரையின் வேகம், கடல் அலைகள் தொட்டு தொட்டுச் செல்லும் கடற்கரை வழியே அதிகரித்துக் கொண்டே இருந்தது. வேகமாக வீசிக் கொண்டிருந்த கடற்காற்றில் நீர்த்திவளைகளும் மணற்துகள்களும் சிதறடிக்கப்பட்டன. அவற்றைச் சீறிக் கொண்டு சென்ற குதிரையின் மீதிருந்த இளந்திரையனின் பார்வை, தனக்கு இடப்பக்கமாயிருந்த கடற்பரப்பு முழுவதையும் பொன் சிவப்பு நிறம் பூசியதுபோல் எரிந்த தீப்பிழம்பை அச்சத்துடன் கவனித்துக் கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் மெய்மொழி அரையனாரின் படை இருந்த இடத்தை குதிரை சென்றடைந்தது.
அங்கே, சிதைந்து கிடந்த பகைவர்களின் உடல்களுக்கு ஊடே, தீவெட்டிகளுடன் பாண்டிய நாட்டு வீரர்கள் புடைசூழ, உயரமான குதிரையில் அமர்ந்தவாறு அரையனார் கடலில் நடந்துகொண்டிருந்த நிகழ்வை வெறித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இளந்திரையன், "சீராளரே! என்ன நடந்து கொண்டிருக்கிறது அங்கே?' என்று வினவியவாறு, படைவீரர்கள் இருபுறமும் அகல, அரையனாருக்கு அருகே சென்றார்.
அதைக் கேட்ட அரையனாரின் முகம் இளந்திரையனை நோக்கித் திரும்பியது. கடுஞ்சினத்தால் சிவந்திருந்த அவரது அகன்ற விழிகள், பளபளவென தீவெட்டி வெளிச்சத்தில் மின்னின. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது என்ற விரக்தியோடு கலந்த அச்சத்தையும் அவை வெளிப்படுத்தின.
"இளந்திரையனே! அங்கே ஒரு கப்பற்கலன் வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறது. சேந்தன் நல்லன் நம் வீரர்கள் சிலரோடு அங்கே சென்றிருக்கின்றான். இம்முத்தூற்றுக் கூற்றத்தை எரிப்பரந்தலை செய்ய வேண்டுமென்று, எரிகலன்களை கப்பல் முழுவதும் நிரப்பி, அங்கே பகைவர்கள் காத்திருப்பதாக நல்லன் என்னிடம் சில வீரர்களோடு இங்கு வந்து கூறினான்.
இந்தச் செய்தியை, பாண்டியர் மாளிகையில் பிடிபட்ட பகைவர்களிடம் விசாரணை செய்தபோது அறிந்ததாகவும், காலை விடிவதற்குள் அக்கலனைத் தகர்த்தாக வேண்டும் என்றும், இப்பணியைத் தானே முன்னின்று முடித்து விடுவேன் என்றும் கூறி, அதற்கான அனுமதியையும் கேட் டான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/siddhar1-2026-01-30-15-18-39.jpg)
நான் அது பற்றி யோசிப்பதற் குள், இப் பணி அவசர நிமித்தமாகச் செய்தாக வேண்டுமென வற்புறுத்தி வேண்டினான். அவன் கூறியது சரியெனப்பட்டதால், நானும் அனுமதி அளித்துவிட்டேன். ஆனால் இந்நிகழ்வைப் பார்க்கும்போது, இப்பணிக்காக அவன் அழைத்துச் சென்ற வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இத்தகைய பெருவெடிப்பில் அவர்களுக்கும், நல்லனுக்கும் என்ன நேர்ந்திருக்கும் என எண்ணும் போது என் உள்ளம் அச்சத்தால் நடுங்குகிறது' என்று அரையனார் கூறினார்.
அதைக் கேட்ட இளந்திரையன் "சீராளரே!
சேந்தன் நல்லன் மிகுந்த புத்திக் கூர்மையுடையவன். அவனது கணிப்பில் தவறு இருக்காது. ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்று ஆயத்தமடைந்தால், அதை முழுமையாகச் செய்து முடிக்காமல் விட மாட்டான். தன் கடமையில் தீவிரம் காட்டும் அதே வேளையில், தன்னை நம்பி வந்தவர் களுக்கு எவ்விதத் தீங்கும் நேரக்கூடாது என்ற துடிப்போடு செயல்படுவான்.
அவன் அங்கே தனது கடமையை, தன் கூற்றுப்படி நிறைவேற்றியிருப்பான். நீங்கள் அமைதியுறுங்கள்.
இதே முந்நீர் பெருவிழாவின் போது, முப்பது ஆண்டுகளுக்கு முன், இம்முத்தூற்றுக் கூற்றத்தில் அனாதைக் குழந்தையாகத் திரிந்த, இரண்டுவயது நிரம்பிய அந்தக் குழந்தையை, நம் குரு ஏகன் ஆதனார் தூக்கி எடுத்து வளர்த்தவர். மறுவாழ்வு அளித்த இந்த முத்தூற்றுக் கூற்றத்திற்கு பெரும் தீங்கு வருமென்றால், அதை அவன் கவனமின்றி விடமாட்டான். தன் உயிரையே கொடுத்தாவது அதை மீட்டெடுக்கத் துடிப்பான். அவனது எந்தத் திட்டமும் வீணாகாது. அவன் குருவுக்குப் பிடித்தமான செல்லக்குழந்தை. தன் குழந்தையாகவே தன்னோடு வைத்துக் குருநாதர் வளர்த்தது மட்டுமல்ல; அறிவுக் கூர்மையும், மிகுந்த ஆற்றலும் கொண்டவனாக அவனை உருவாக்கியிருக்கிறார்.
தாங்கள் விரும்பினால் நாம் அங்கு செல்லலாம்.
நாங்கள் குருநாதரின் அழைப்பிற்கிணங்க ஏகன் ஆதனார் கோட்டத்திலிருந்து இங்கு புறப்பட்டபோது, அவனது இல்லாள் யவனமங்கை என்னைப் பார்த்து,"நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். உங்களையும் சேர்த்து, உமது உயிர்தோழர் பாதுகாப்பார்' என்று கூறி நல்லனை என்னோடு அனுப்பி வைத்தாள் அவ்வீரமங்கை.
அவ்வமையம் நல்லன் கவச உடையணிந்து என்னோடு புறப்பட ஆயத்தமடைந்தபோது, மீண்டும் தன் இல்லத்திற்குள் சென்று, தொட்டிலில் கண் அயர்ந்திருந்த தன் ஆறு திங்கள் அகவையுடைய மகனைத் தூக்கிக் கொஞ்சினான். தன் கழுத்தில் அணிந்திருந்த பொற்தொம்பையைக் கழற்றி, அவன் கழுத்தில் அணிவித்தான். தன் இரு கைகளாலும் அவனைத் தூக்கி நிறுத்தி, அவன் அழகை ரசித்துவிட்டு, யவன தேசத்து இல்லாளிடம் கொடுத்தபோது, இவனை நம்மை விட அறிவுக் கூர்மையுடன் வளர்க்கும் பொறுப்பு உன்னுடையது. நாளை இம்மண்ணில் தலைசிறந்த புதிய படைப்பாளனாக உருவாக்க வேண்டும். எல்லாம் உன் கையில்,’ என்று கூறி, அவளின் நுதலில் முத்தமிட்டு விடைபெற் றான். அந்தக் காட்சி இப்போது என் நெஞ்சில் நிழலாடுகிறது.
நம் குரு அவனுக்குப் பாசத்தையும் பண்பையும் ஊட்டி வளர்த்ததோடு, சீராளும் திறமையையும் வளர்த்து வந்தார். உலகளாவிய பாண்டிய நாட்டுச் செட்டியத்தை (வணிகத்தை) சீர்தூக்கி நிறுத்த வேண்டிய அனுபவம் பெறுவதற்காக, திரைமீளும் பொழுதெல்லாம் என்னையும் அவனையும் உடன் அழைத்துச் சென்றார்.
அப்போது அவனுக்கு நைல் ஆற்றுப்பகுதி, அலெக்ஸாந்திரிய நகரம், ரோமாபுரி ஆகியவை மிகவும் பிடித்த இடங்களாக இருந்தன. எனக்குக் கீழை நாடுகளின் பண்பாடுகள் பிடித்திருந்தமையால், கீழை நாடுகளிலிருந்து வரும் வணிகப் பொருள்களால் பாண்டிய நாட்டுப் பண்டாரம் சிறக்க வேண்டும் என்று எண்ணி, நல்லனுக்கு கிரேக்க, ரோம, எகிப்திய வணிகத்தின் நுணுக்கங்களை ஆய்ந்தறிய பயிற்சி அளித்தார்.
அவனை ஆறு பாண்டிய நாட்டு சாத்தர் குழுவுடன் நைல் ஆற்று சமவெளிக்கு அனுப்பி வைத்தார். ஆறு திங்கள் கடந்தபின், அவன் ஒரு திட்டத்துடன் பாண்டிய நாட்டிற்கு வந்தான். அவன் கூறியதாவது:
அங்கிருந்து வரும் வியாபாரக் கப்பல்கள், நேரடியாகப் பாண்டியர் துறைமுகத்தை அடைய இயலாமல், பல நாட்டுத் துறைமுகங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டு, பல இன்னல்களையும் இடையூறுகளையும் அனுபவித்த பின்னர் தான், உயிரற்ற உடல்கள்போல் பாண்டியர் துறைமுகத்தை வந்து சேர்கின்றன. இவ்வாறு வணிக முதலீட்டாளர்கள் செயல்பட வேண்டிய நிலை நீடித்தால், அவர்கள் பாண்டிய நாட்டிற்கு எந்த வகையிலும் உதவ மாட்டார்கள். களைப்பும் சலிப்பும் அடைந்த அவர்கள், சேரநாட்டுத் துறைமுகத்தோடு தங்கள் கடற்பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கு ஓய்வெடுத்து, மீண்டும் ரோமாபுரிலிசெங்கடல் நோக்கிய பயணத்திற்கே ஆயத்தமடைகின்றார்கள்.
எனவே, செங்கடலிலிருந்து ஆழ்கடல் வழியே நேரடியாக குமரி, கொற்கை, மருங்கூர் துறைமுகங்களை வந்தடைய வேண்டும். இதற்கான செயல் திட்டங்களை மேற்கத்திய அயலக தேசத்தவர்களுக்கு எவ்விதத்திலும் தெரியாமல் நிறைவேற்ற வேண்டும்.
அவ்விதமாக ஒரு சிறப்பான ஆழ்கடல் வழியை அவன் நிர்ணயித்துத் தந்தான். அதனைச் செயல்படுத்தத் திறமை மிகுந்த பாண்டிய நாட்டுப் பரதவ திரைமீளர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுடன், எல்லா வசதிகளும் பாதுகாப்பும் கொண்ட ஒரு மிகப்பெரிய கப்பற்கலன் உருவாக்கப்பட்டது. அதில் அறுபது தினங்களுக்குரிய உணவு, குடிநீர் நிரப்பப் பண்டகசாலை, சயற் கூடம், ஐம்பது பேர்கள் பயணிக்கத் தக்க அறைகள் ஆகியவை அமைக்கப் பட்டன.
அக்கப்பற்கலன், கொற்கையிலிருந்து திறம்படைத்த திரைமீளர்களால் இயக்கப்பட்டது. கப்பலில் சென்றோர் மேலைநாட்டு மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சேரநாட்டுத் துறைமுகங்களைக் கடக்கும் பொழுது நடு இரவாக இருக்க வேண்டும் என்றும், கலனில் விளக்குகள் ஏதும் ஏற்றப்படக் கூடாது என்றும், ஆழ்கடலுக்குள் செல்லும் வரை பிற மேற்கு கடற்கரை துறைமுகக் காவலர்களுக்குத் தெரியாதவாறு இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டனர்.
அத்திட்டத்தின்படி, சேந்தன் நல்லனின் செயல் மிகச் சரியாக நிறைவேறி, குழு எகிப்திய துறைமுகத்தைச் சென்றடைந்தது.
அச்சமயம், எகிப்து நாடு ரோமானியப் படைகளால் கைப்பற்றப் பட்டு, ரோமாபுரியின் ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்ட காலம். அது நல்லனின் திட்டத்தை மேலும் எளிமையாக்கியது. ரோமர்களின் நட்பையும் யவனர்களின் ஆதரவையும் பெறுவதற்காக, துறைமுகத் தலைமை ஆட்சி அலுவலருக்கு தனிப்பட்ட முறையில் அரிய பரிசுப் பொருள்கள் வழங்கி, பாண்டியப் பேரரசரின் விருந்தினராக முந்நீர் பெருவிழாவிற்கு வருகை தர அழைப்பு விடுத்தனர். அவரது அனுமதியுடன், செங்கடலில் இக்கப்பல் சென்று வர ஒப்புதல் பெறப்பட்டது. அதன் வழியே அலெக்ஸாந்திரிய நகரை எளிதாக அடைந்தனர்.
செங்கடல் பயணத்தின் போது, எகிப்து, கிரேக்கம், ரோம், அரேபியப் பகுதிகளின் பூர்வீக செல்வந்தர்களின் நட்பையும், அங்குள்ள பூர்வீகக் குடிகளுக்குத் தேவையான வாணிபப் பொருள்களையும் ஆய்ந்தறிதல் இவர்களின் தலைமைப் பணியாக இருந்தது. மேலும், அரபு நாட்டுக் குதிரைச் சந்தை பாண்டிய நாட்டில் மட்டுமே நடைபெற வேண்டும் என்ற திட்டமும் தீட்டப்பட்டது.
இதற்காகவே, நல்லன் தன் வாழ்க்கைத் துணைவியாக யவனப் பெண்ணை மணம் செய்ய வேண்டியிருந்தது.
-இளந்திரையனின் வாய்மொழி
அடுத்த இதழிலும் விரியும்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/siddhar-2026-01-30-15-18-27.jpg)